Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Monday, October 4, 2010

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.
அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:

30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.

1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.

இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.

இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.

வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.

இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.

பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:

``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:

``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.

ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

-M.அப்துல் ரஹ்மான் எம்.பி.



"அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இடிக்கப்பட்டது ஓர் அநியாயச் செயல்;அக்கிரமச் சம்பவம்;இந் நிகழ்வுக்குக் காரணமாகவும்,பின்புலமாகவும் இருந்தவர்கள் மிகப்பெரும் அளவில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்."என்று லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கண்டித்திருக்கிறது.
சமய சார்பற்ற நிலையில் நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் வரவேற்றனர் இந்தத் தீர்ப்பை.



பாரத நாட்டின் பாரம்பரியமிக்க பாராளுமன்றம் லிபரான் கமிஷனின் இந்த பார்போற்றும் தீர்ப்பைப் பாராட்டியதோடு,அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற பலதரப்பட்ட குரல்களையும் இந்திய அரசின் கவனத்திற்குப் பதிவு செய்தது.
மஸ்ஜிது இருந்த அந்த இடத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்தும் வழக்கின் தீர்ப்பு இப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

" நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் அது மதிக்கப்பட வேண்டியது"என்பதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் அநியாயமாகவும்,அக்கிரமமாகவும் வெறிச்செயலில் ஈடுபட்டுத் தகர்க்கப்பட்ட மஸ்ஜிது இருந்த இடத்தில் "ராமர் பிறந்த இடம்"என்று வம்பு செய்து அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்ட காரணத்தால் சட்டப்பூர்வமான எந்த பின்னணியும் இல்லாமல் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த இடம் ராமர் பிறந்ததாகச் சொல்லுகிறது இந்த தீர்ப்பு.மேலும் அந்தக் குறிப்பிட்ட இடமே ராமர் கோயில் கட்டத்தகுந்த இடம் என்றும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதோ?என்கிற ஐயப்பாடு நாட்டில் நிலவுவதை மறுக்கவியலாது.
நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படியானத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.ஆவணங்கள் இல்லாத நிலையில் நிலத்தின் பயன்பாட்டுக் காலத்தையே பெரிதும் கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண்கிறோம்.
ஆனால் இந்த அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு,பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நியாயமான எதிர்பார்ப்பை முழுமைப் படுத்துவதாக இல்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான்.



இது இப்போது மேல் முறையீடு என்ற உரிமையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுகிறது."காலம் நீட்டிக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் நியாயமான தீர்ப்பு இறுதியில் வெளிச்சத்துடன் வெளிவரும்"என்பது மனசாட்சியுள்ளோர் அனைவரும்,இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், நீதிமன்றங்களில் சத்தியம் நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோர்கள் அனைவரும் மதம் கடந்து மனித நேயம் போற்றும் சான்றோர் யாவரும் எதிர்பார்க்கும் யதார்த்த நிலை.


தர்மத்தினை சூது கவ்வலாம்,ஆனால் இறுதியில் தர்மம் வெல்லுவதுதானே நியாயம்?அதுவே ஒரு நல்ல நிறைவான தீர்வாக அமையும்!.இந்த நல்ல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.!

Friday, December 12, 2008

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்


http://www.muslimleaguetn.com/news.asp?id=452


ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.

கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.

டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ~~மக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ~இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.

- வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்